Sunday, February 6, 2022

ஸ்ரீ பகவத் கீதை : என்னை அறிதலும், அறிவின் விரிவும்

 ஸ்ரீ கிருஷ்ணன் : 

‘என்னிடம் ஈடுபட்ட மனமும், என்னைத் தழுவி ஆழ்ந்த யோகமும் பொருந்தி நீ எப்படி என்னைப் பற்றி நன்கு உணர முடியும் என்பதை நன்கு கேள் அர்ச்சுனா! அந்த ஞானத்தையும், அதன் தொடர்பான அறிவின் விரிவையும் இவற்றையெல்லாம் மிச்சமின்றி உனக்குச் சொல்கிறேன், எதை அறிந்தபின் அறிய வேண்டியது எதுவும் எஞ்சி இருக்காதோ அதை உனக்குச் சொல்கிறேன். 

மனிதர்கள் பலரிலும் இலட்சியத்தை அடைய வேண்டி முயல்பவர்கள் மிகச்சிலர். அவ்வாறு முயல்பவர்களிலும் என்னை உள்ளபடி அறிபவர்களோ மிகவும் சிலரே. 

பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அகங்காரம் இங்ஙனம் எட்டுப் பிரிவாய் இருப்பது என்னுடைய இயற்கை. இதனினும் வேறாய் இவற்றினும் மிக்கதாய் என்னுடைய ஓர் இயற்கை உண்டு. அதுதான் ஜீவன் என்பது. இவற்றால்தான் இந்த உலகம் தாங்கப்படுகிறது. இந்த இரண்டு இயற்கைகளின் காரணமாகவே உயிர்கள் அனைத்தும் உருவாகின்றன என்று அறிவாயாக. நானே இவற்றைப் படைப்பவனும் மீட்டும் இவற்றையெல்லாம் ஒடுக்குபவனும் என்று அறிவாயாக. என்னிலும் உயர்ந்தது எதுவும் இல்லை. என்னிலேயே நூலில் மணிகணங்கள் போல் இவையெல்லாம் கோக்கப்பட்டிருக்கின்றன. 

நீரில் அதன் நீர்மையாகவும், சந்திர சூரியர்களில் அவற்றின் ஒளியாகவும் இருப்பது நானே. வேதங்கள் அனைத்திலும் பிரணவமாகவும் (ஓம்காரம்), ஆகாயத்தில் ஒலியாகவும், மனிதரில் அவர்களின் ஆள்வினையுடைமையாகவும் இருப்பது நானே. மண்ணில் நறுமணமாகவும், நெருப்பில் திகழ்ச்சியாகவும், அனைத்து உயிர்களிலும் ஜீவனமாகவும், தவத்தினரின் தவமாகவும் இருப்பது நானே. அனைத்து உயிர்களுக்கும் என்றும் மாறாத ஆதி வித்தாகவும், புத்தியில் சிறந்தவரிடம் புத்தியாகவும், ஒளியுற்றுத் திகழ்வோரிடம் ஒண்மையாகவும் திகழ்வது நானே. 

ஆசை, பற்று அகற்றிய பலவான்களின் பலமாகவும், அறத்திற்கு விரோதம் இல்லாத ஆசையாகவும் நான் இருக்கிறேன். சாத்விக மனநிலை, ராஜஸ, தாமச மனநிலை அனைத்தும் என்னிலிருந்து உண்டாகுபவை என்று அறி. அவை என்னில் இருக்கின்றன. ஆயினும் அவற்றிற்கு அகப்பட்டு நான் இல்லை. இந்த மூன்று குணங்களால் ஆன மனநிலைகளில் மயக்கமுற்று இந்த உலகம் என்னைத் தெரிந்துகொள்வதில்லை. நானோ இவற்றைக் கடந்து மாற்றம் எதுவுமற்றவனாய் இருக்கின்றேன். தெய்வ காரணமாய் உண்டானதும், முக்குண மயமானதுமான இந்த என்னுடைய மாயையானது கடத்தற்கு முடியாதது. என்னையே யார் சரணம் ஆடைகின்றார்களோ அவர்களே இந்த மாயையைக் கடந்து செல்கின்றனர். 

தீமை புரிவோர், மூடர்கள், மனிதர்களில் இழிந்தகுணம் உள்ளவர்கள், மாயையில் அறிவை இழந்தவர்கள், அசுரத்தன்மை உள்ள மனநிலைகளில் தோய்ந்தவர்கள் என்னை அண்டிச் சரணம் அடைவதில்லை. 

மக்களில் நான்கு விதமானவர்கள் நன்மை செய்வோராய் என்னைத் தொழுகிறார்கள். துயருற்றவர்கள், அறிவதில் வேட்கை கொண்டோர், செல்வத்தை வேட்பவர்கள், ஞானிகள் என்னும் நான்கு வகையினர். அவர்களில் ஞானியானவன் என்றும் என்னில் பொருந்திய யோகியாய், என் ஒருவனையே கருதும் பக்தியால் சிறந்தவன் ஆகிறான். எனக்குப் பிரியமானவன் ஞானி. அவனுக்குப் பிரியமானவனும் நானே. இந்த நான்கு வகையினருமே பெருந்தன்மை மிக்கவர்கள். அவர்களிலும் ஞானி என்பவன் என் ஆத்மாவே என்று என் கருத்து. அவன் தன்னை முற்றிலும் என்னிடம் பொருத்தியவனாய் என்னையே மிக்குயர்ந்த கதிப்பேறாய்க் கொண்டிருப்பவன். பல பிறவிகள் கழிந்த பின்னர்தான் ஒரு ஞானி ’வாசுதேவனே இஃதனைத்தும்’ என்று உணர்ந்து என்னை அண்டிச் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா கிடைத்தற்கரியவன். 

பலப்பல ஆசைகளால் அறிவு கவரப்பட்டும், தம் தம் இயல்பினால் ஏவப்பட்டும் மக்கள் பிற தெய்வங்களைச் சார்ந்து அவ்வவற்றிற்குரிய நியமங்களைப் பின்பற்றுகின்றனர். யார் யார் எந்த வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட விரும்பினாலும் அவர்களின் சிரத்தையை அந்தந்த வழியில் அசையாததாய் ஆக்குகிறேன். அத்தகைய சிரத்தை நிலைபெற்று அவர்கள் அந்த வடிவத்தை ஆராதித்துத் தங்கள் விருப்பங்கள் நிறைவேறப் பெறுகின்றனர். அவை என்னாலேயே நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. இவ்வாறு பல வடிவங்களைத் தொழுது அவர்கள் பெறும் பலன்கள் முடிவுறும் பலன்கள். முடிவுறும் பலன்களை விரும்பி அந்தத் தெய்வ வடிவங்களை அண்டி வேள்விகள் புரிகின்றனர். என்னையே விரும்பும் என் பக்தன் என்னைச் சரணம் எய்துகிறான். 

மாற்றமிலாததும், உயர்வற உயர்ந்ததும் ஆன என்னுடைய மிக்குயர்ந்த இயல்பை அறியாராய் மக்கள் தம் மதியிழந்து என்னை வெளிப்படாத நிலையிலிருந்து இப்பொழுது வெளிப்பட்டு வடிவு கொண்டவனாய்க் கருதுகின்றனர். என்னுடைய யோகமாயையால் நன்கு மறைக்கப்பட்டு நான் அனைவருக்கும் புலனாவதில்லை. மூடத்தனத்தால் உலகினர் என்னைப் பிறவாதவன் என்றும், மாற்றம் அற்றவன் என்றும் அறிந்துகொள்வதில்லை. 

கடந்துபோனவை, நிகழ்ந்துகொண்டிருப்பவை, இனியுண்டாகுபவை என்று அனைத்து உயிர்களையும் நான் அறிவேன். ஆனால் யாரும் என்னை அறிவது இல்லை. பிறந்தது தொட்டே உயிர்கள், இச்சை, வெறுப்பு என்பனவற்றால் வலுவாக உருவான இரட்டை என்னும் மோகத்தால் உயிர்கள் அனைத்தும் பெரிதும் மயக்கமுற்றுச் செல்கின்றன. புண்ணிய கர்மத்தால் பாபம் நசித்துவிட இரட்டை என்னும் மோகத்தினின்றும் முற்றிலும் விடுபட்டுத் திடமான விரதம் பூண்டவர்களாய் என்னையே வழிபடுகிறார்கள். 

முதுமை, மரணம் இவற்றினின்றும் விடுபடவேண்டி என்னைச் சரணடைந்து முயல்பவர்கள், அவர்கள் பிரம்மத்தை அறிகின்றனர், ஆத்மா என்பதைப் பற்றிப் போதிய அளவு அறிகின்றனர், மேலும் கர்மம் என்பதைப் பற்றி அனைத்தையும் அறிகின்றனர். 

ஐம்பூதங்கள் மயமான உலகை அறியும் போதும் என்னோடு இணைத்து யார் அறிகின்றர்களோ, தெய்விக விஷயங்கள் குறித்து அறியும் போதும் என்னோடு இணைத்தே யார் அறிகின்றார்களோ, யஜ்ஞம் சம்பந்தமான விஷயங்களைக் குறித்தும் என்னோடு இணைத்தே யார் அறிகின்றார்களோ அவர்கள் கடைசியில் பிரயாணப்படுகின்ற காலத்திலும் விலகாமல் பொருந்திய உள்ளத்துடன் என்னையே அறிந்தவாறிருக்கின்றனர். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, January 29, 2022

ஸ்ரீ பகவத் கீதை : சில சிந்தனைகள்

 ஆறு எண்ணிக்கை உள்ள தொகுதிக்குப் பெயர் ஷட்கம். ஸ்ரீ பகவத் கீதையை, மொத்தம் 18 அத்யாயங்களின் கணக்கையே மூன்று ஆறு என்று யோசித்துப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. முதல் ஆறு முதல் ஷட்கம். நடு ஷட்கம் நடுவில் ஆறு. அதாவது அத்யாயம் 7 முதல் அத்யாயம் 12 வரை. கடைசி ஆறு அத்யாயம் 13 முதல் அத்யாயம் 18 வரை என்று மூன்று ஷட்கங்கள் என்று பிரித்துப் பார்த்துப் பொருள் சிறப்பு தருகிறார் ஸ்ரீராமானுஜர். முதல் ஷட்கத்தால் (ஆறு அத்யாயங்களால்) ஆத்மாவின் உண்மையான இயல்பு புரிந்துகொள்ளப் படுகிறது. 

இப்பொழுது சில கேள்விகளைக் கேட்போம். அர்ச்சுனன் போர் புரிவதில் ஆர்வத்துடன் இருந்தான். போர்க்களம் வந்ததும் நெருங்கிய உறவினர்களைப் பார்த்துவிட்டுப் பாசத்தில் கலங்கிப் போரே வேண்டாம் என்று சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். அவனுக்குப் போர். நமக்கோ அன்றாடப் பிரச்சனைகள். போதாதென்று அவ்வப்பொழுது முளைக்கும் சிக்கல்கள். இதில் திடீரென்று வாழ்க்கைக்கு என்ன பொருள் என்று நடு இரவில் முழிப்பு தட்டியது போல் சில சமயம் திக்பிரமை பிடித்தது போல் சிந்தனைகள். ஓடுகிற ஓட்டத்தில் நடுவில் பிரேக்டௌன் போல் வண்டியே உட்கார்ந்துவிடும் கட்டங்கள். அர்ச்சுனனுக்கு வாழ்வில் என்றோ ஒரு நாள்தான் கலக்கம். நமக்கோ தினம் தினம். சரி விஷயத்திற்கு வருவோம். அர்ச்சுனனுக்குக் கலக்கம். அவனை மீண்டும் போர் புரிய வைக்க வேண்டும். அவ்வளவுதானே! ஏன் அதற்கு இவ்வளவு பெரிய தத்துவ சாத்திர யோக உபதேசம் எல்லாம்? ஒரு வேளை ஏற்கனவே எழுதி வைத்திருந்த சாத்திரத்தை வேத வியாசர் இந்தக் கட்டத்தில் வைத்து பப்ளீஷ் செய்கிறாரா? என்று தோன்றும். 

ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம். அர்ச்சுனன் ஓர் அரசன். அவனுக்குப் போர்க்களம், கத்தி, வெட்டு, படையெடுப்பு, எதிரிகளின் தாக்கல், உயிர் அபாயம், பிற உயிர்களை எடுக்கும் போது அந்த ஜீவனின் அலறல், வாழ்க்கையின் நிலையின்மை, மரணம், மரணத்திற்குப் பிந்தைய நிலை என்ன, இந்த ஜீவன் இருக்கிறதா இல்லையா - இது போன்ற கேள்விகள் நமக்கு எப்பொழுதாவது தோன்றக் கூடிய கேள்விகள். ஆனால் அரசர்களுக்கு இவை அன்றாட யதார்த்தம். அதாவது இந்தப் பிரச்சனைகள் அவர்கள் மனத்தில் எழுந்து அவர்களை திக்குமுக்காட வைத்துக்கொண்டே இருக்கும். அவர்களின் மனம் எப்பொழுதும் அமைதியில் கூடத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டே இருக்கும். ஒரு விதத்தில் பார்த்தால் ஐயோ பாவம் வாழ்க்கைதான் அரசர்களின் வாழ்க்கை. அவர்கள் அப்படிப்பட்ட சிரமங்களைப் படுவதில்தான் சாதாரண மக்களின் அன்றாடம் அமைதியாக ஓடுகிறது. 

எனவே அர்ச்சுனனின் உள்கஷ்டம் என்ன என்பது ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். எத்தனையோ நாள் அவனும் ஸ்ரீ கிருஷ்ணனை எத்தனை தத்துவக் கேள்விகள் எல்லாம் கேட்டிருப்பான். இப்பொழுது அத்தனையும் சேர்ந்து வண்டி குடை சாய்ந்துவிட்டது. அவனுக்குச் சொல்லும் போது உங்களுக்கு எனக்கு எல்லாம் சொல்வது போல் பொதுப்படச் சொல்ல முடியாது. பிரச்சனையின் கிழங்கைக் கெல்லி எடுத்தால்தான் பள்ளத்திலிருந்து சக்கரம் நகரும். இது ஸ்ரீகிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். எனவேதான் இவ்வளவு தத்துவ விளக்கம். இது நமக்குப் பொழுது போக்கு. ஆனால் அரசர்கள் வாழ்வில் மரணமும், மரணத்தின் பிந்தைய நிலை பற்றிய கவலையும் அன்றாடம் தலைதூக்கும் திகில் பிரச்சனைகள். எனவே ஸ்ரீ கிருஷ்ணன் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு உரையாடலாகச் சொன்ன உபதேசம்தான் கீதை என்பது பொருத்தமே. 

வரலாற்றில், பாரசிக மன்னனால் சிறைபடுத்தப்பட்ட குரோஸ மன்னன் தீ நடுவில் கட்டி நிறுத்தப்பட்டுத் தண்டனைக்குக் காத்திருக்கிறான். தகிக்கிறது உஷ்ணம் சுற்றிலும். அப்பொழுது என்றோ கிரேக்க முனிவன் ஸோலோன் தனக்குச் சொல்லிச் சென்ற உபதேசம் நினைவுக்கு வர குரோஸ மன்னன் பெரிதாகச் சிரிக்கிறான். சாகப் போகிறவன் இப்படிச் சிரிக்கக் காரணம் என்ன என்று அறிய அவனை கட்டவிழ்த்து அமர வைத்துக் கேட்கிறான் பாரசிகன். ஸோலோன் என்னும் முனிவன் தனக்குக் கூறிய தத்துவ உபதேசத்தைக் கூறுகிறான் குரோஸன். இருவரும் நட்பாகி விடுகின்றனர். தீயின் நடுவில் தத்துவச் சிந்தனையா என்று நமக்குப் புரியாது அந்த அரசர்களின் அவஸ்தைகள். நம்முடையது சராசரி செட்டுச் சிக்கனமான வாழ்வு. எல்லாம் பொழுதுபோக்கு. சௌகரியம் என்ற பொந்திற்குள் நம் அன்றாடம் ஓடுகிறது. திடுக்கிடும் நிச்சயமின்மைகள் சூழத்தான் அரசர்களின் ஒவ்வொரு கணமும் நகர்கிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

ஸ்ரீ பகவத் கீதை : தியானம் முக்கியம்

 தியானத்தின் முக்கியத்தைச் சொல்லத் தொடங்குகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். துறவி என்றால் புற வடிவம், புற நடவடிக்கை என்று புரிந்துகொள்வதை விட உண்மையான விதத்தில் துறவாவது யாது என்பதை மீண்டும் வலியுறுத்தித் தொடர்கிறான். 

‘கர்மபலன்களில் பற்றை விடுத்துச் செய்ய வேண்டியது என்ன, செயல், அதை செய்ய வேண்டிய முறை என்று செய்பவன் பார்க்கப் போனால் உண்மையில் அவனே சந்நியாசி. அவனே யோகி. வேள்விகள் புரிவதற்கான அக்கினியை விட்டவன் சந்நியாசி என்பதன்று. அதேபோல் எல்லா செயல்களையும் கைவிட்டவன் தான் சந்நியாசி என்பதோ யோகி என்பதோ அன்று. சந்நியாசம் என்று சொல்லப்படுவதுதான் யோகமும் ஆகும் என்பதை உணர்வாய். பலன்களைக் குறித்த தன் சங்கல்பங்களைச் சந்நியாசம் செய்யாமல் யாரும் கர்மயோகியாக ஆவதில்லை. 

கர்மத்தை யோகமாகச் செய்யவேண்டும் எனில் முதலில் கர்மம் செய்தல் என்பதே தொடக்கம். (செயல் எதுவும் செய்யாத சோம்பேறித்தனம் கர்மயோகமாக ஆகாது). அடுத்து கர்மயோகம் என்பதில் யோகம் என்ற அம்சம் சித்திக்க வேண்டும் என்றால் சமத்துவ புத்தி என்பதன் காரணமாகத்தான் கர்மம் என்பது கர்மயோகமாக மாறுகிறது. 

எப்பொழுது புலன் விஷயங்களிலும், செயல்களிலும் ஒருவனுக்குப் பற்று என்பது இல்லாமல் போகிறதோ, உள்நோக்கத்துடன் செய்யும் செயலுக்கான சங்கல்பங்கள் அனைத்தும் எப்பொழுது ஒருவன் துறந்துவிடுகிறானோ அப்பொழுதே ஒருவன் யோகத்தில் உயர்ந்து முன்னேறிவிட்டான் என்று ஆகிறது. 

ஜீவன் என்பவன் தன் மனத்தாலேயே தன்னை மேல்தூக்கி உயர்த்திக் கொள்ள வேண்டும். மனத்தால் தான் தாழ்ந்து போக ஒரு நாளும் விடக் கூடாது. ஆத்மாவிற்கு உற்ற நண்பனாய் ஆகக் கூடியதும் மனமே. பகையாய்ப் போய்விடக் கூடியதும் இந்த மனமேயாகும். 

எப்படி மனம் நண்பனாக ஆகிறது? எப்படி மனம் பகையாக மாறுகிறது? நன்கு அடக்கித் தன்வசப்படுத்தப்பட்டால் மனம் உற்ற நண்பனாக ஆகிவிடுகிறது. அடக்கி வசப்படுத்தப்படாத மனமே பகையாகி எதிர்க்கவும் செய்கிறது. 

நன்கு வசப்பட்ட மனம் உடையவன், நிறைவும், உயர்ந்த மனநிலையும் வாய்த்தவனாய் இருப்பவனின் பெரிய ஆத்மாவோ என்றால் குளிர்ச்சி, வெப்பம், சுகம், துக்கம், மானம் அவமானம் என்பனவற்றில் ஒரே மாதிரியாக அடங்கி அமைதியாக இருக்கிறது. 

ஆத்ம ஞானத்திலும், இயற்கையைக் குறித்த தெளிந்த அறிவிலும் திருப்தியடைந்தவனாய், ஆத்மா என்பதில் நிலைபெற்றவனாய், புலன்களை வென்றவனாய், கல்லுருண்டை, பொன் ஆகியவற்றில் நிலைபெயராத சம புத்தியுடையவனாய் இருக்கும் கர்மயோகியே யோகத்தில் நன்கு பொருந்தியவன் எனப்படுகிறான். 

நலம் விழைவோன், நண்பன், பகைவன், பொருட்டாக நினைக்காமல் இருப்பவன், சார்பு, எதிர்ப்பு இல்லாமல் நடுநிலையாக இருப்பவன், வெறுப்பவன், உறவினன், நல்லவன், பாபி என்று அனைவரிடமும் ஆத்மா என்பதில் நிலைபெயராத சமபுத்தியுடன் இருப்பவன் சிறந்து விளங்குகிறான். 

யோகியானவன் எப்பொழுதும் தனியிடத்தில் இருந்துகொண்டு தனிமையில் தன்னை யோகத்தில் பொருத்த வேண்டும். எண்ணம், மனம் என்பதை நன்கு அடக்கியவாறு ஆசைகள் அற்றவனாய், பொருட்களைச் சேர்ப்பதில் கருத்தில்லாதவனாய் யோகத்தில் ஆழவேண்டும். 

தூய்மையான இடத்தில் நன்கு நிலைப்படுத்தி அதிக உயரமும் அதிக தாழ்ச்சியும் இல்லாத ஆசனமிட்டு அதில் அமர்வதற்கு உரிய விரிப்பை விரித்து, அந்த ஆசனத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகப்படுத்தி, புலன்களையும் அதன் செயல்களையும் முழுதும் அடக்கித் தன் இதய சுத்திக்காக யோகம் பயில வேண்டும். 

உடல், கழுத்து, தலை ஆகியவற்றை நேராக நிலைநிறுத்தி, அசையாமல், நிலையாக நின்று மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்தி, எத்திசையிலும் பாராமல், உயர்ந்த மனநிலையுடன், பயத்தைத் துறந்தவனாய், காமத்தைத் துறந்த பிரமச்சாரி விரதத்தில் நிலைத்தவனாய், மனத்தை அடக்கி, என்னிடம் இலயித்த சித்தமுடன், என்னைக் குறித்து யோகத்தில் அமர வேண்டும். 

இவ்வாறு எப்பொழுதும் மனத்தைச் செலுத்தியவனாய் நன்கு கட்டுண்ட மனத்தையுடைய யோகி பரநிலையில் தடையற்றுத் திகழ்வதும் என்னில் நிலைநிற்பதுமான சாந்தியை அடைகிறான். 

அதிகம் உண்பவனுக்கும் யோகம் இல்லை. உண்ணாமலே இருப்பவனுக்கும் யோகம் இல்லை. அதிகம் தூங்குபவனுக்கும் யோகம் இல்லை. தூங்காமல் விழித்தே இருப்பவனுக்கும் யோகம் இல்லை. 

உணவில் சரியான அளவு, பொழுதுபோக்கில் சரியான அளவு, செயல்களில் சரியான அளவு, தூக்கம், விழிப்பு என்பதில் சரியான அளவுடன் யோகம் பயில்பவனுக்கு யோகம் துக்கத்தைத் துடைப்பதுவாய் அமைகிறது. 

எப்பொழுது நன்கு அடங்கிய மனமானது ஆத்மாவிலேயே நன்கு பொருந்திவிடுகிறதோ, அனைத்து காமங்களிலிருந்தும் விருப்பு அகன்றுவிடுகிறதோ அப்பொழுதே யோகத்தில் நன்கு பொருந்தியவன் என்று ஒருவன் சொல்லப்படுகிறான். 

’காற்றில்லாவிடத்தே அசையாமல் நின்று எரியும் தீபம்’ என்பதைத்தான் உவமையாகச் சொல்கிறார்கள் நன்கு அடங்கிய மனத்துடன் தன்னில் யோகம் பயிலும் யோகியைக் குறித்து. 

எங்கு யோகத்தில் ஆழ்ந்த மனமானது முற்றிலும் அடங்கி, ஆத்மாவை ஆத்மாவால் பார்ப்பதாகிய அனுபவத்தால் சித்தம் உவகை பூத்து நிற்கிறதோ, எங்கு முடிவற்ற சுகத்தை ஒருவர் புத்தியினால் உணர்கிறாரோ, எந்தச் சுகம் புலன்களுக்கெல்லாம் எட்டாததோ, எதில் நிலைத்து அதிலிருந்து நிலைபெயர்வதில்லையோ, எதை அடைந்ததும் அதனினும் அடையத்தக்கது ஒன்று உண்டு என்று கருதுவதில்லையோ, எதில் நிலைபெற்றபின் மிகப்பெரும் துக்கம் வரினும் ஒருவர் சற்றும் சலிப்படைவதில்லையோ, துக்கத்தினின்றும் முழுதும் விடுபட்ட இந்த நிலையை யோகம் என்று அறிவாயாக. இந்த யோகமானது நிச்சய புத்தியுடன் சற்றும் மனத்தளர்ச்சியின்றி இயற்றப்படல் வேண்டும். 

உள்நோக்கமுள்ள சங்கல்பங்களினின்றும் உண்டாகும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, எல்லாப் பக்கத்தினின்றும் மனத்தை புலன்களிலிருந்தும் மீட்டு, மெதுவாக, மெதுவாக புத்தியினால் நன்கு பற்றி மனத்தை விஷயங்களினின்றும் மீட்க வேண்டும். அந்த மனத்தை ஆத்மாவிலேயெ நன்கு பொருந்துமாறு செய்துகொண்டு வேறு எதையும் பற்றிச் சிந்திக்காமல் இருக்க வேண்டும். 

எங்கெங்கெல்லாம் நிலையற்றதும் சலிக்கின்றதுமான இந்த மனம் திரியுமோ அங்கங்கிருந்தெல்லாம் தடுத்து நெறிப்படுத்தி மனத்தை ஆத்மாவிலேயே இலயிக்குமாறு செய்ய வேண்டும். 

உயர்ந்த மனநிலையில் ஆழ்ந்தவனும், சாந்தியில் திளைப்பவனும், ரஜோகுணம் நீங்கப் பெற்றவனும், தோஷங்கள் அகன்றவனும், பிரம்மமாகவே ஆகிவிட்டவனும் ஆன அந்த யோகி உத்தமமான சுகத்தை அடைகிறான். 

தோஷங்கள் நீங்கப் பெற்று, ஆத்மாவில் நிலைத்தலாகிய யோகத்தில் பொருந்தியவன் எளிதில் சுகமாகப் பிரம்மத்தில் திகழும் முடிவற்ற சுகத்தை அனுபவிக்கிறான். 

யோகத்தில் ஆழ்ந்த மனமுடையோன் எங்கும் சமத்துவத்தையே காண்கிறான். அனைத்து உயிர்களிலும் தன் ஆத்மாவே இருப்பதையும், அனைத்து உயிர்களும் தன் ஆத்மாவில் இருப்பதையும் உணர்கிறான். 

என்னையே எங்கும் காண்பவனும், என்னிடத்திலேயே அனைத்தையும் காண்பவனுமான அந்த யோகி என்னை ஒரு பொழுதும் இழப்பதில்லை; அவனை நானும் ஒரு பொழுதும் இழப்பதில்லை. 

ஒற்றுமை உணர்வில் ஊன்றி, அனைத்து உயிர்களிலும் வதியும் என்னை வழிபடும் யோகியானவன் எவ்விதத்தில் வாழ்பவனாய் இருப்பினும், அந்த யோகி என்னிடத்திலேயே வாழ்பவன் ஆகிறான். 

அனைத்திலும் இருக்கும் ஆத்மா என்ற சமத்துவப் பார்வையில், சுகமோ, துக்கமோ ஒன்றாகக் கருதியிருக்கும் யோகி எவனோ அவன் மிக உயர்ந்தவன் என்பது என் கருத்து. 

அர்ச்சுனன் கூறுகிறான். : 

‘மதுசூதனா! சமத்துவப் பார்வையில், நீ சொல்லும் இந்த யோகமானது நிலைத்து நிற்க முடியும் என்று நான் கருதவில்லை. சஞ்சலத்தன்மை உடையது இந்த மனம். 

இந்த மனம் சஞ்சலமானது. கிருஷ்ணா! அடங்காதது, வலியது, முரடானது. அதை அடக்குவது என்பது என் கருத்தின்படிப் பார்த்தால் காற்றை அடக்குவதைப் போன்று செயற்கரியது.’ 

ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார் (ஆத்ம சாதன வழியில் மிக முக்கியமான குறிப்பு இஃது) : 

‘பெருந்தோள் படைத்தவனே! சந்தேகமே இல்லை. மனத்தை அடக்குவது மிகவும் அரியது. மனம் சலிக்கும் இயல்புடையது. ஆனால் விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இயற்றுவது ஆகிய அப்யாசத்தினாலும், பற்றுகளை ஒழித்த நிலையாகிய வைராக்கியம் என்பதை விடாமல் கைக்கொள்வதனாலும் மனத்தைக் கட்டியடக்க முடியும். 

என் கருத்தின்படிப் பார்த்தால் சுயக்கட்டுப்பாடு இல்லாதவனால் யோகமானது அடைதற்கரிது. ஆனால் சுயக்கட்டுப்பாடு உடையவனால் விடாமுயற்சியினால் தகுந்த உபாயங்களால் யோகம் எய்த முடியும்.’ 

அர்ச்சுனன் கேட்கிறான்: 

‘ஒருவன் சிரத்தையோடு முயல்கிறான். ஆனால் தகுந்த அளவு முயற்சியைச் செய்யவில்லை. மனம் சஞ்சலத்தில் அடங்காமல் போகிறது. அவன் யோகத்தில் முழுமையாக நன்னிலை எய்தவில்லை. அப்பொழுது அவனுடைய கதி என்ன ஆகும்? 

’உலக வாழ்க்கையும் இழந்து, யோக சித்தியும் இழந்து பிரம்மத்தை நோக்கியப் பாதையில் முனைந்த அவன் மனம் குழப்பத்திலாழ்ந்து பெருங்காற்றில் அகப்பட்ட மேகம் போல் சிதறுண்டு அன்றோ போய்விடுவான், கிருஷ்ணா? 

’இதுதான் என் சந்தேகம். இதை நீதான் தீர்க்க வேண்டும் கிருஷ்ணா! இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு உன்னை விட்டால் புகலில்லை.’ 

ஸ்ரீகிருஷ்ணனின் பதில் : 

‘பார்த்தா! இங்கும் சரி. அங்கும் சரி. அவனுக்கு அழிவு என்பதே கிடையாது. ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள். நன்மையைச் செய்த யாரும் துர்க்கதியை அடைவதே கிடையாது குழந்தாய்!’ 

(உலக இலக்கியங்களிலேயே உன்னத வாக்கியம் இதுவாகும். நன்மையைச் செய்தவர்களுக்குக் கஷ்டம்தான் வரும் என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களே நிறைந்த உலகில் கணீரென்று கிருஷ்ணனின் குரல் ஒலிக்கிறது ‘நன்மையைச் செய்தவர் ஒரு நாளும் அழிவை அடைவதில்லை’ என்று. ) 

’யோகத்தில் வெற்றியடையாமல் போனவர் புண்ணியங்கள் செய்தவர்கள் எய்தும் லோகங்களை அடைந்து தம் கர்மங்கள் கழிந்த பின்னர் உலகில் தூயோரும், வளமுடையோரும் ஆனவர்களின் இல்லத்தில் பிறக்கின்றனர். 

’அல்லது யோகிகளின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றனர். ஆனால் அவ்வாறு யோகிகளின் குடும்பத்தில் வந்து பிறக்கும் பிறப்பானது மிகவும் அரிதாக நிகழக் கூடியது. 

’இரண்டு விதத்தில் எப்படியேனும் பிறந்தபின் தங்களுடைய விட்டுப்போன முன்னர் வாய்த்த புத்தியை மீண்டும் பெற்றவர்களாய், முன் தேகத்தில் விட்ட இடத்திலிருந்து யோகத்தில் தொடர்கின்றனர். முன்னம் செய்த அப்யாசத்தின் வலிமையால் அவர்களையும் மீறி யோகத்தில் அவர்கள் முன்னேற்றம் காண்கின்றனர். யோகத்தில் அவர்களுக்கு உண்டாகும் ஞான இச்சை என்பது அவர்களைத் தன்னைப்போல் இயற்கையின் பல அனுபவ நிலைகளைத் தாண்டிப் போகச் செய்து விடுகிறது. இப்படி ஆர்வமுடன் முயன்று தோஷங்களெல்லாம் அகலப்பெற்றுத் தூயராய், பல பிறவிகளில் விடாமல் தொடர்ந்த முயற்சியினால் உயர்ந்த கதிக்குச் செல்கின்றனர். 

’எனவே யோகியானவன் தவம் செய்பவனை விடவும் சிறந்தவன். ஞானியை விடவும் சிறந்தவன் என்பது என் கருத்து. கர்மிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. எனவே யோகியாக ஆவாய் அர்ச்சுனா! யோகிகளிலும் யார் ஒருவர் என்னிடம் முற்றிலும் தோய்ந்த உள்ளத்தராய், சிரத்தையோடு என்னைத் தொழுகின்றார்களோ அவர்கள் யோகிகளிலெல்லாம் சிறந்தவர் என்பது என் கருத்து.’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Friday, January 28, 2022

ஸ்ரீ பகவத் கீதை : துறவு என்றால் என்ன?

(’யோகமாகச் செய்வதில் கர்மங்களைத் துறந்துவிடு’ என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதைக் குறித்து குழப்பம் தெரிவிக்கிறான் அர்ச்சுனன். அவன் குழம்புகிறானோ இல்லையோ நாம் இப்படியெல்லாம் குழப்பம் கொள்வோம் என்பதை எதிர்பார்த்திருக்கிறார் வேத வியாஸர். அதாவது ’பலன்களில் இச்சை, நான் எனது என்ற எண்ணம், நான் தான் செயல் புரியும் அதிகாரி என்ற நினைவு’ இந்த மூன்றும் சாதாரணமாகக் கர்மம் புரிபவருக்கு இருப்பவை. இந்த மூன்றோடு கர்மம் செய்தால் அந்தக் கர்மம் உலகக் கவலைகளில் ஆழ்த்திப் பந்தப்படுத்திவிடும். அவனை வெறுமனே கர்மி என்றுதான் சொல்லமுடியும். ஆனால் ’பலன்களில் இச்சை, நான் எனது என்ற எண்ணம், தான் தான் செய்யும் அதிகாரி என்னும் நினைவு’ என்ற மூன்றையும் விடுத்து அதே கர்மங்களைச் செய்யும்போது அது கர்மயோகமாக ஆகிவிடுகிறது. அப்பொழுது யோகமாகச் செய்வதில் கர்மங்களைத் துறந்துவிடு என்று சொல்வதில் பொருளுண்டு. ஆனால் கர்மம் செய்வது என்றாலே கர்மியாக இருந்து மூன்றையும் விடாமல் கர்மம் செய்வதுதான் என்ற எண்ணம் பலமாக இருப்பவர்க்கு இந்த நுட்பமான வித்யாசம், கர்மத்திற்கும், கர்மயோகத்திற்கும் இடையில் இருக்கும் வித்யாசம் லேசில் புரியாது. இதை நம் மனத்தில் ஆழமாகக் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக அர்ச்சுனன் கேட்பதும் அதை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குவதும் இங்கு பயன்படுகிறது.) 

அர்ச்சுனன் : ‘கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்துவிடு என்றும் சொல்கிறாய். பின்னர் கர்மயோகம் என்றும் சொல்கிறாய். சந்நியாசம் அது சிறந்ததா? அல்லது கர்ம யோகமா? ஏதாவது ஒன்றை நிச்சயமாகச் சொல்.’ 

ஸ்ரீகிருஷ்ணன் : ‘சந்நியாசம், கர்மயோகம் இரண்டுமே சிறப்பைத் தருபவை. இந்த இரண்டில் கர்மங்களை விட்டுவிடுவதாகிய சந்நியாசம் என்பதை விடக் கர்மங்களை யோகமாக இயற்றும் கர்ம யோகமே மிகவும் சிறந்தது. 

சந்நியாசி என்றால் நீ வெளித் தோற்றத்தை வைத்துப் புரிந்து கொள்கிறாய். யார் வெறுப்போ, விருப்போ இன்றி, இரட்டைகளில் சிக்காமல், பந்தங்களினின்றும் விடுபட்டுச் சுகமே இருக்கிறாரோ அவரை நித்யமான சந்நியாசி என்று நீ அறிந்துகொள். 

ஞானத்தை மட்டும் கைக்கொண்டு சாங்க்யம் என்ற வழி தனி என்றும், கர்மயோகம் என்பது தனி வழி என்றும் சொல்பவர் அறிவு வளராத சிறுபிள்ளைகள் போன்றோர். பண்டிதர்கள் அங்ஙனம் நினைப்பதில்லை. இரண்டில் எதில் நீ நன்கு புரிந்துகொண்டு தொடர்ந்து சென்றாலும் ஒரே நன்னிலைதான் முழுமையாகக் கிடைக்கப் பெறும். 

ஞானத்தையே வழியாகக் கொண்ட சாங்கியர்கள் என்று சொல்லப்படுவோர் எந்த நிலையை அடைகிறார்களோ அதே நிலையைத்தான் கர்மயோகம் என்பதைக் கைக்கொண்டு செல்வோரும் அடைகின்றனர். ஞானமாகிய சாங்கிய வழியும், கர்மயோக வழியும் ஒன்றே என்று புரிந்துகொண்டவர்கள்தாம் உண்மையில் புரிந்தவர்கள். 

சந்நியாசம் என்று ஞானத்தையே கைக்கொண்டு அனைத்தையும் துறந்து செல்லும் வழியிலும் மூவிதத் தியாகத்துடன் கூடியதாகிய யோகத்தின் துணையில்லாமல் இலட்சியத்தை அடைவது மிகவும் கடினம். ஆனால் யோகத்தில் பொருந்திய மனனசீலம் மிக்கவனோ தாமதமின்றி விரைவில் பிரம்மத்தை அடைந்து விடுகிறான். 

யோகத்தில் பொருந்திய அந்தத் தூயவன், தனது புலன்களை வென்று வெற்றியாளனாகத் தன் ஆத்மாவே அனைத்து உயிர்களினுள்ளும் திகழும் ஆத்மா என்று உணர்ந்தவனாய் அவன் கர்மங்கள் புரியினும் அவனை எந்தக் கர்மமும் தொடுவது கூட இல்லை. 

எதையும் துளியும் நான் செய்வது கிடையாது என்ற மனப்பாங்கை யோகியானவன் கொள்ள வேண்டும். பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, உண்பது, செல்வது, தூங்குவது, மூச்சுவிடுவது, பேசுவது, கழிப்பது, பிடிப்பது, கண் திறப்பது, மூடுவது என்று அனைத்தும் புலன் விஷயங்களை புலன்கள் செய்கின்றன என்று எண்ணத்தைக் கொண்டவனாய் இருக்க வேண்டும். 

பிரம்மத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் பற்றில்லாமல் யார் கர்மங்களைச் செய்கிறானோ அவனிடம் பாபங்கள் ஒட்டுவதில்லை. தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லையன்றோ! 

தமது உள்ளத் தூய்மைக்காக வேண்டி மட்டும் யோகியர் உடலால், மனத்தால், புத்தியால், பற்றைத் துறந்து, புலன்களால் மட்டும் கர்மங்கள் புரிகின்றனர். 

யோகியானவர் கர்மபலன்களில் பற்றைத் துறந்து, விடாத ஈடுபாட்டால் விளைந்த சாந்தியை அடைகின்றனர். யோகம் கைக்கொள்ளாதவரோ பலன்களில் பற்றால் கர்மங்களால் கட்டுண்டு விடுகின்றனர். 

அனைத்துக் கர்மங்களையும் மனத்தளவில் துறந்த தன்னடக்கம் வாய்ந்தவன் ஒன்பது வாயில் புரமாகிய உடலில் எதையும் செய்யாமலும் செய்ய வைக்காமலும் சுகமாக உறைகிறான். கர்மங்களையோ, கர்மங்களைச் செய்யும் அதிகாரி என்னும் மன நிலையையோ, கர்மப் பலன்களையோ படைத்தவர் உயிர்களுக்கு உண்டாக்கவில்லை. சுபாவத்தின் வழியே அனைத்தும் பின் தொடர்கிறது. எங்கும் விரிந்த முழுமையில் பாபம் என்றோ, புண்ணியம் என்றோ தனியே வைக்கப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் மூடி மறைக்கப்பட்டு அதனால் உயிர்கள் மயக்கம் அடைகின்றன என்பதுதான். 

யாரிடத்தில் ஞானத்தால் அஞ்ஞானம் என்பது அழிக்கப்பட்டுவிட்டதோ அவர்களிடத்தில் ஆதித்யனைப் போன்று ஞானமானது பரம நிலையை நன்கு விளங்கக் காட்டுகிறது. அந்தப் பரம நிலையில் தோய்ந்த புத்தியும், அதிலேயே இலயித்த தங்கள் ஆத்மாவுமாய், அதிலேயே நன்கு நிலைபெற்றவர்களாய், அதையே தங்கள் அறுதியான புகலிடமாய்க் கொண்டவர்களாய், ஞானத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று மீண்டு வருதல் இல்லாத பெருநிலைக்கு அவர்கள் செல்கின்றனர். 

பேரறிவால் அவர்களுக்குப் பெரும் அடக்கம் உண்டாகிறது. பண்டிதர்களாகிய அவர்கள் நன்கு கற்றவர்கள் மீதும், பசுக்களின் மீதும், யானை, நாய், நாயின் இறைச்சியை உண்பவர் என்று யாரிடத்தும் சமத்துவமான பார்வையைக் கொள்கின்றனர். 

யார் சமத்துவம் என்னும் மனப்பாங்கில் நிலைத்தவர்களோ அவர்கள் இங்கேயே மாறும் இந்த உலகிலேயே அவர்கள் வெற்றியடைந்துவிட்டனர். பிரம்மம் என்பதே தோஷங்கள் எதுவும் அற்ற சமமான நிலை என்பதுதானே! எனவே அவர்கள் பிரம்மத்திலேயே நிலைத்துவிட்டனர் அன்றோ! 

ஆத்மாவில் நிலைத்த புத்தியுடன் உடல்தான் தான் என்ற மயக்கம் சிறிதும் அற்றவர்களாய், பிரம்மத்தை அறிந்தவர்களாய், பிரம்மத்தினிடமே நிலைபெற்றவர்களாய் இருப்போர் பிரியமானவை வரும் பொழுது உற்சாகம் அடைவதோ, பிரியமற்றவை வரும் பொழுது பதட்டப்படுவதோ இல்லை. 

புறப்பொருட்களில் எவ்விதப் பற்றும் அற்று, ஆத்மா ஒன்றிலேயே சுகம் காண்பவர் எவரோ, பிரம்மத்தினிடம் எப்பொழுதும் ஈடுபடும் தோய்ந்த உள்ளம் கொண்ட அத்தகையோருக்குக் குறைவேயற்ற சுகம் விளைகிறது. 

புறப்பொருட்களின் தொடர்பால் உண்டாகும் போகம் துக்கத்தின் பிறப்பிடமாகும். ஆரம்பித்து ஒரு காலத்தில் முடிந்துவிடும். அறிவாளிகள் அவற்றில் இன்புறுவதில்லை. 

உடல் விழும் முன்னே இங்கேயே யார் இந்தக் காமம், குரோதம் இவற்றின் வேகத்தை மறுத்துத் தாங்கவல்லவரோ அவரே மனிதர்களில் யோகியானவர், சுகமும் அவருக்கே. 

யாருடைய சுகம் உள் எனப்படும் ஆத்மாவிலோ, யாருடைய ஓய்வும், இன்பமும் ஆத்மாவிலோ, யாருக்கு உள்ளே சோதி விளக்கமாக இருக்கிறதோ அந்த யோகியே பிரம்மமாகவே ஆகித் தடைகள் அற்ற பிரம்ம அனுபவத்தை அடைகிறான். 

இரட்டைகளின் இடரகற்றி, ஆத்மாவிலேயே அடங்கிய மனத்தராய், அனைத்து உயிர்களையும் தன் ஆத்மாவே போல ஒப்பக் கருதி அவற்றின் நன்மையில் மகிழ்பவராய் இருக்கும் ரிஷிகளே தோஷங்கள் எல்லாம் அகன்றவராய் தடையற்ற பிரம்ம அனுபவத்தை அடைகின்றனர். 

காமம், குரோதம் முற்றிலும் நீங்கப் பெற்றவராய், தன்னடக்கமே பயிலும் இயல்பினராய், சிந்தையும் நன்கு அடங்கப் பெற்றவராய், ஆத்ம ஞானம் வாய்க்கப் பெற்றோருக்கு இங்கேயே தடையற்ற பிரம்ம அனுபவம் அவர்கள் கையகத்ததாய் ஆகிவிடுகிறது. 

புறப்பொருட்களின் தொடர்பை வெளியே நிறுத்தி, புருவங்களுக்கிடையில் பார்வையை நிறுத்தி, நாசிகளின் வழியே இயங்கும் பிராணன், அபானன் இவைகளின் கதிகளைச் சமமாக ஆக்கி, புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை அடக்கி, மோக்ஷமே ஒரே இலட்சியமாகத் திகழும் மனன சீலனாகிய முனியாய் இருப்பவர் யாரோ, இச்சை, பயம், குரோதம் எல்லாம் கழன்றவராய் யார் இருக்கின்றாரோ அவர் எப்பொழுதும் முக்தராகவே ஆனவர். 

அப்படிப்பட்டவர் அனைத்து யக்ஞங்கள், தவம் அனைத்திலும் என்னையே அனுபவிப்பவன் என்பதை அறிந்து, என்னையே அனைத்து உலகங்களுக்கும் மகத்தான ஈச்வரனாய் அறிந்து, அனைத்து உயிர்களுக்கும் உற்ற நண்பனாய் என்னையே அறிந்து சாந்தியில் ஆழ்கிறார். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, January 27, 2022

ஸ்ரீ பகவத் கீதை : அறிவுடன் செயலா? செயலின் துறவா?

 ஸ்ரீ கிருஷ்ணர் : ‘அர்ச்சுனா! கர்ம யோகம் என்னும் இந்தச் சிறந்த மார்க்கத்தை நான் ஆதிகாலத்தில் விவஸ்வானுக்குச் சொன்னேன். பிறகு இந்த வழியானது ராஜரிஷிகளின் வழியாகவே வந்துகொண்டிருக்கிறது.’ 

அர்ச்சுனனுக்கு இந்தப் பேச்சு விநோதமாகப் படுகிறது. கேட்கிறான். ‘என்ன கிருஷ்ணா! விவஸ்வான் எவ்வளவு காலத்திற்கு முன்னால் இருந்தவர். நீயோ இதோ இப்பொழுது என் கண்முன்னால் இருக்கின்றாய். அந்தப் பழங்காலத்தில் நீ விவஸ்வானுக்குச் சொன்னாய் என்றால்....’ 

‘அர்ச்சுனா! நீயும் நானும் இப்பொழுதுதான் இந்தப் பிறவியில்தான் சந்தித்துக் கொள்கிறோம் என்றா நினைக்கிறாய்? இல்லை. எத்தனையோ பிறவிகள் இதற்கு முன்னரும் உண்டு அர்ச்சுனா, நானும் நீயும் சேர்ந்து பேசியதும் உண்டு. ஆனால் அதையெல்லாம் நீ அறியவில்லை. நான் முழுதும் அறிந்திருக்கிறேன் பார்த்தா! 

நானும் பிறந்துகொண்டுதான் இருக்கிறேன் என்று யோசிக்கிறாயா? இல்லை. இயற்கையை வசப்படுத்தி என் சொந்த ஆச்சரியமான மாயா சக்தியால் தோற்றம் கொள்கிறேன். அறத்திற்கு எப்பொழுதெல்லாம் நலிவு உண்டாகிறதோ, அறம் அற்றதை அகற்றி அறத்தை மேலோங்கச் செய்ய சிருஷ்டியில் நானே வடிவு கொள்கிறேன். நல்லோரைக் காப்பாற்ற வேண்டும். தீமை புரிவோரை அகற்ற வேண்டும். அறம் என்பதை நன்கு நிலவும்படியாகச் செய்ய அவ்வப்பொழுது யுகத்திற்கு யுகம் தோன்றுகிறேன். 

நான் எப்படித் தோன்றுகிறேன் என்பதோ, நான் தோன்றி என்ன என்ன செய்கிறேன் என்பதோ அனைத்துமே தெய்விகமானவை அர்ச்சுனா! அவற்றை உள்ளபடி அறியும் அறிஞர்கள் இந்தத் தேகத்தை விடுத்து மீண்டும் பிறவியெடுப்பதில்லை. 

பற்று, அச்சம், சினம் ஆகியவற்றைத் துறந்து, என்னிலேயே தோய்ந்தவர்களாய், என்னையே புகலாக எய்தியவர்களாய், ஞானத்தீயில் மாசெல்லாம் அகன்று தூயர்களாய், என்னுடைய பரம நிலையிலேயே அடைந்து விட்டவர்கள் பலரும் உண்டு அர்ச்சுனா! 

யார் என்னை எந்த வழியில் அண்டி ஆர்வமுடன் தொழுகிறார்களோ அவர்களுக்கு அந்த வழியிலேயே அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன். மக்கள் எந்த வழியைப் பின்பற்றினாலும் என்னை நோக்கிய வழியில்தான் பின்பற்றி வருகின்றனர் பார்த்தா! 

இந்த உலகம் செயல்களுக்கு வெற்றியைத் தரும் உலகம். எனவே தமக்கு வேண்டியவற்றில் வெற்றியைக் குறித்து மக்கள் பல தெய்வங்களுக்கு வேள்வி புரிகின்றனர். ஆனால் நானோ கர்மங்களில் கட்டுண்டவன் இல்லை. கர்ம பலன்களிலும் எந்தப் பற்றும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவர்கள் கர்மங்களில் கட்டுண்டு இருப்பதில்லை. இப்படி உணர்ந்துதான் முன்னால் இருந்த முமுக்ஷுக்களும் (முக்தியில் வேட்கை கொண்டோர்) கர்மத்தை யோகமாகப் புரிந்து சென்றார்கள். நீயும் அவ்வாறே முன்னோர் முற்காலத்தில் செய்து போந்த நெறிப்படியே கர்மத்தை யோகமாகச் செய். 

செயல் என்றால் என்ன? செயலின்மை என்றால் என்ன? இந்த விஷயத்தில் பெரும் அறிஞர்களே குழம்புகின்றனர். ஒருவரை உலக ஆசைகளில் பந்தப் படுத்தும் செயல் என்பது அசுபம் ஆகும். அதிலிருந்து விடுபடும் வகையில் செயல் ஆற்றுவது எப்படி என்று உனக்குச் சொல்கிறேன். அதை அறிவதால் அசுபத்திலிருந்து நீ விடுபடலாம். 

கர்மங்கள் யாவை என்று அறியவேண்டும். கர்மங்களில் செயற்பாலது, விலக்கத்தக்கது என்னும் விரிவையும் அறிய வேண்டும். செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞானநிலை என்னும் அகர்மம் என்றால் என்ன என்றும் அறிய வேண்டும். செயல் என்பதன் மார்க்கம் உண்மையில் ஆழமானது. 

யார் கர்மத்தின் நடுவே அகர்மத்தைப் பார்க்கிறானோ, செயலுக்கு நடுவே செயல்களைத் தாண்டிய ஞானம் என்பதையும் உட்கொண்டு நடக்கிறானோ, அகர்மம் என்பது உண்மையில் அகங்காரம், மமகாரம், பலன்களில் பற்று என்னும் இவற்றைத் துறந்து யோகமாகக் கர்மத்தை ஆற்றுவதே ஆகும் என்று அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவனே சம்த்வ புத்தி என்பது வாய்ந்த புத்திமான். மனிதர்களில் அவனே யோகி. செய்ய வேண்டியதனைத்தையும் செவ்வனே செய்வோன். 

யார் அனைத்து முயற்சிகளையும் உள்நோக்கத்தோடு முனைதல் என்னும் சங்கல்பத்தையும், பலனில் ஆசையையும் விடுத்துச் செய்கிறானோ, அறிவாகிய தீயில் யாருடைய கர்மங்கள் எரிக்கப்பட்டு விட்டதோ அவனையே ஞானிகள் பண்டிதன் என்று சொல்கிறார்கள். 

கர்மத்தின் பலன்களில் பற்றுதலை விடுத்து, என்றும் திருப்தியுற்றவனாய், எதையும் எதிர்பார்த்துச் சாராதவனாய் இருப்பவன் எத்தனை கர்மங்கள் செய்தாலும் சிறிதும் செயல் புரியாதவனாகவே கருதப்படுவான். 

எதிர்பார்ப்பு எதுவும் இன்றி, உடல் மனம் ஆகியவற்றை நன்கு அடக்கி, அனைத்து விதத்திலும் பற்றையொழித்த அவனோ வெறுமனே பார்வைக்குச் செயல் புரிகிறவனாய் இருப்பதால் குறைகள் அவனைச் சேர்வதில்லை. 

செயலில் யதேச்சையாகக் கிடைப்பதில் முழு திருப்தியடைந்து, இரட்டைகளைக் கடந்து, அழுக்காறு என்பதை அகற்றி, எய்துவது எய்தாமல் போவது என்பதில் சமபுத்தியுடன் இருப்பவன் செயல் புரிந்தாலும் அதனால் கட்டுண்பதில்லை. 

பற்றுவிட்டவன், விடுதலையடைந்தவன், ஞான அவஸ்தையில் மனம் நிலைத்தவன், யக்ஞம் என்னும் நோக்கில் மட்டுமே செயல் புரிபவன், அவனுடைய அனைத்து கர்மங்களும் கரைந்துவிடுகின்றன. 

பிரம்மத்திற்கே அனைத்தையும் அர்ப்பணித்தான், பிரம்மமே அவன் அர்ப்பணிக்கும் படையலும், எதில் அர்ப்பணிக்கிறானோ அந்தத் தீயும் பிரம்மமே, யார் அர்ப்பணிக்கிறான் அவனும் பிரம்மமே, பிரம்மத்திற்கே அவன் செல்கிறான், பிரம்மத்திலேயே அவன் கர்மம் நிறைவடைகிறது. 

யக்ஞம் என்பதைப் பலரும் பலவடிவில் செய்கிறார்கள். சில யோகியர் முழுமையாக உபாசனை செய்தல் என்னும் விதத்தில் தெய்வத்தைக் குறித்து யக்ஞம் செய்கின்றனர். சிலர் பிரம்மமாகிய அக்னியில் தம்மையே அர்ப்பணிப்பதாகிய யக்ஞத்தைச் செய்கின்றனர். சிலரோ கேள்வி முதலிய புலன்களை அடக்குவது ஆகிய யக்ஞத்தைச் செகின்றனர். சிலரோ இந்திரியங்கள் என்னும் அக்னியில் சப்தம் முதலிய புலன் விஷயங்களை யக்ஞமாகச் செய்கின்றனர். இன்னும் சிலர் இந்திரியங்கள் அனைத்தின் வேகத்தையும், பிராணன்களின் இயக்கத்தையும் தன்னடக்கம் என்னும் யோக அக்னியில் ஞான நெருப்பால் தூண்டப்பட்டு யக்ஞம் செய்கின்றனர். திரவியங்களை யக்ஞம் செய்வோர், தவம் என்பதை யக்ஞம் செய்வோர், யோகமாகிய யக்ஞம் செய்வோர் என்று பலப்பலர். நன்னெறிக்கான நூல்களைப் படிப்பது, அறிவதில் ஈடுபடுவது என்று சிலர் சுயக் கட்டுப்பாட்டுடன், விரதம் மிக்கு யக்ஞமாகச் செய்கின்றனர். 

இன்னும் சிலரோ உடலுக்குள் செல்லும் மூச்சு, உடலை விட்டு வெளியே செல்லும் மூச்சு என்று அதில் கருத்தைச் செலுத்தி மூச்சுக்காற்றின் இயக்கத்தை நிறுத்திப் பிராணாயாமம் என்பதை யக்ஞமாகச் செய்கின்றனர். சிலரோ உணவுக் கட்டுப்பாடு என்பதைக் கைக்கொண்டு காற்றில் காற்றைப் படையலாகச் சொரிவது போன்று யக்ஞம் புரிகின்றனர். 

இவர்கள் அனைவரும் யக்ஞத்தைப் பலவிதத்தில் அறிந்தவர்கள். யக்ஞம் செய்வதால் தம் தோஷங்கள் நீங்கப் பெற்று, யக்ஞத்தில் மிஞ்சியதை உண்பவர்களாய் என்றும் இருக்கும் பெருநிலையான பிரம்மத்தையே அடைகிறார்கள். அவ்வளவு ஏன் அர்ச்சுனா! இந்த உலகத்திலேயே பொதுநன்மை என்னும் யக்ஞத்தில் பங்கு கொண்டு அதன் விளைவாக வரும் வளத்தில் பயனடைவோரே உலகத்தில் மதிக்கப்படுகின்றனர். அறத்தின் வழிநின்ற வாழ்க்கை அதுதான். இதற்கு மாறாக நடப்பவர்கள் நல்ல வாழ்க்கையை இந்த உலகத்திலேயே இழந்துவிடுகிறார்கள் என்னும் போது யக்ஞம் என்னும் பொதுநன்மை, முழுமையான நோக்கம் என்பதில்லாமல் மறுமையில் மட்டும் அவர்களுக்கு எப்படி நற்கதி உண்டாகும் சொல்! 

பிரம்மத்தின் வாயிலாகப் பல விதமாக யக்ஞம் இருக்கிறது. கர்மத்தை யோகமாகப் புரிதல் என்னும் அதிலிருந்து இத்தனை வித வடிவமாக யக்ஞம் உண்டாகிறது. இதை நன்கு அறிந்து விடுபடுவாய் அர்ச்சுனா! 

பரந்தபா! திரவிய யாகங்களை விட ஞானயக்ஞம் சிறந்தது. கர்மங்கள் எல்லாம் ஞானத்தில் நிறைவை எய்துகின்றன அன்றோ! அத்தகைய ஞானத்தை நீ ஞானிகளிடம் சென்று சேவை புரிந்து நன்கு விசாரித்துத் தெரிந்துகொள். தத்வத்தை உள்ளபடி உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தைப் போதிப்பார்கள். 

எதையறிந்தால் மீண்டும் மோகத்தை அடையமாட்டாயோ, அந்த ஞானத்தை அடைந்த பின்னர் உயிர்கள் அனைத்தையும் உன்னிடத்திலும், உன்னையும் சேர்த்து என்னிடத்திலும் அடங்கியிருக்கக் காண்பாய். பெரும் பாபம் புரிந்தவனாயினும் ஞானம் என்பது ஓடம் போல் அவனை மீட்டு நன்னிலைக்குக் கொண்டு வருகிறது. 

வளர்க்கப்பட்டு நன்கு எரியும் அக்கினியில் விறகைப் போட்டாலும் எப்படிப் பொசுக்கிவிடுகிறதோ அப்படியே அர்ச்சுனா! ஞானம் என்னும் அக்கினியானது கர்மங்கள அனைத்தையும் சாம்பல் ஆக்கிவிடுகிறது. 

தூய்மைப்படுத்துவதில் ஞானத்திற்கு ஒப்பாகச் சொல்ல எதுவும் இல்லை. அதை நீயே யோகத்தால் அறியவருவாய். காலத்தில் உனக்குள்ளேயே அந்த ஞானம் உண்டாகும். 

அதிலேயே ஊன்றிய மனத்தனாய், புலன்களை அடக்கியவனாய் சிரத்தையுடன் இருப்பவனுக்கு ஞானம் உண்டாகும். ஞானத்தால் உயர்ந்த சாந்தி மிகவிரைவில் எய்தப்படுகிறது. 

அஞ்ஞானத்தில் ஊன்றியவன், அசிரத்தையின் இருப்பிடம் ஆனவன், சந்தேகமே பழக்கமாய் உடையவன் அழிந்துதான் போகிறான். சந்தேகமே வழக்கமாய் உடையவனுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை, சுகமும் இல்லை. 

எனவே யோகமாகச் செயலைப் புரிவதன் மூலம் கர்மத்தை விடுத்து, ஞானத்தால் சந்தேகம் என்பதை மாய்த்து ஆத்மாவிலே பொருந்தியிருப்பவனைக் கர்மங்கள் பந்தப்படுத்துவதில்லை தனஞ்சயா! 

அதனால் அஞ்ஞானத்தில் விளைந்ததும் இதயத்தில் புரையோடியதுமான சந்தேகம் என்பதை ஞானம் என்னும் ஒண் வாளால் வெட்டிச் சாய்த்து யோகத்தில் நிலைபெற்று எழுந்திடு பாரதா! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, January 26, 2022

ஸ்ரீ பகவத் கீதை : செயலையே யோகமாக ஆக்கு!

 அர்ச்சுனன் கேட்கிறான். அவனா கேட்கிறான்? நாம்தான் கேட்கிறோம். எத்தனை முறை கேட்டிருப்போம்! 

‘ஜநார்த்தனா! அறிவு என்றும் சொல்கிறாய். பிறகு செயல் புரி என்றும் சொல்கிறாய். இரண்டையும் நீயே சொல்கிறாய். கலந்து கலந்து சொல்கிறாய். செயலை விட அறிவே சிறந்தது என்பது உன் எண்ணம் என்றால் பின் ஏன் என்னைக் கொடுமையான கர்மத்தில் ஏவுகிறாய்? ஏதாவது ஒன்றைச் சொல். எது சிறந்தது? எதைத் தேர்ந்தெடுத்தால் நான் சிறப்பு எய்த முடியும்?’ 

கண்ணனுக்கோ உள்ளூற சிரிப்பு. போர் புரியமாட்டேன் என்று உட்கார்ந்தவன் இப்பொழுது அறிவா செயலா என்னும் விசாரத்திற்கு வந்துவிட்டான். யார் யாரிடமோ பல விஷயங்களைக் கேட்டிருக்கிறான். இப்பொழுது இதுவா அதுவா என்று அல்லாடுகிறான்! 

‘அர்ச்சுனா! உலகத்தில் பார்த்தால் இரண்டுவிதமான அக்கறையுள்ள மனிதர்கள் இரண்டுவிதமான ஈடுபாடுகள் உடையோராய் இருக்கின்றனர். அறிவு ஆராய்ச்சியால் அறுதியான தத்துவத்தையும், உயர்ந்த பேற்றையும் எய்துவதில் ஒரு சாரார் ஈடுபாடு கொண்டுள்ளனர். மற்றவர்கள் செயலை யோகமாகச் செய்தலில் நாட்டம் கொண்ட யோகிகள். 

செயலையே ஆரம்பிக்க வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம் என்று வெறுமனே இருப்பதால்  மட்டுமே கர்மம் அற்ற நிலை என்னும் நைஷ்கர்ம்யம் என்பது அடையப் படுவதில்லை. செயலைத் துறப்பதால் மட்டுமே உயர்ந்த அந்த இலட்சியம் எய்தப்படுவதும் இல்லை. நீ செயல் செய்ய மாட்டேன் என்று இருந்தாலும் மனித உயிரின் அமைப்பு, இயற்கையானது உன்னை எப்படியோ ஏதாவது செயலில் ஈடுபட வைத்துவிடும். சரி. கர்மம் செய்யமாட்டேன் என்று அடம்பிடிப்பவன் புறத்தில் எதுவும் செய்யாமல் உள்ளத்தில் ’இதைச் செய்திருக்கலாம், அதைச் செய்திருக்கலாம், இந்த நேரத்திற்கு இதையெல்லாம் செய்திருந்தால் இவற்றை அடைந்திருக்கலாம். என்ன செய்வது? வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டோம். இப்பொழுது என்ன செய்ய முடியும்?’ என்று மனத்தில் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் அவன் அறிஞன் என்றோ யோகி என்றோ ஆகமாட்டான். உண்மையில் பொய்யான ஒழுக்கமும் எண்ணமும் கொண்டவன் என்றுதான் ஆகும். 

ஆனால் புலன்களை அடக்கிப் பற்றில்லாமல் செயல்களைக் கர்மயோகமாகச் செய்பவனோ சிறப்பை எய்துகிறான். 

நியதமாகச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய். செயல் செய்யாமல் இருப்பதை விட அது எவ்வளவோ மேலானது. 

உலகம் நன்மையுற வேண்டுமென்றால் பலரும், பல செயல்களையும் அந்த நேரத்தில் தங்களுக்கு எந்த லாபம் இல்லையென்றாலும் பொது நன்மை என்பதைக் கருத்தில் கொண்டு அக்கறையாகச் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு பொதுநன்மைக்கு என்று அக்கறையுடன் சொந்த லாபம் என்ற பற்றின்றிச் செய்யப்படுவது யக்ஞம் என்று சொல்லப்படும். ஆனால் மக்களோ இந்த யக்ஞம் என்ற நோக்கமுமின்றி, யக்ஞம் என்பதையும் சொந்த லாபத்திற்காக என்று செய்யும் பொழுது அவர்களின் செயலே அவர்களையும் அழிக்கிறது. பொதுவிலும் நன்மையும் விளைவதில்லை. எனவே குந்தியின் மைந்தா! நீ எப்பொழுதும் எதைச் செய்தாலும் பொதுநன்மை யக்ஞம் என்பதை மனத்தில் கொண்டு, பலன்களில் பரபரப்பு இன்றிச் செயல் புரிவாயாக. படைக்கும் பொழுதே பிரஜாபதியானவர் இந்தப் பொதுநன்மை என்னும் யக்ஞம் என்பதை மக்களுக்குக் கொடுத்து ’இதை மறக்காமல் கைக்கொண்டு உங்கள் வளர்ச்சியைச் சாதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் இந்தப் பொது நன்மையாவது யக்ஞம் என்பதை மீறாமல் அதன் மூலமாகவே அடையுங்கள். உங்களுக்கு நன்மையைச் செய்யும் காமதேனுவாய் இந்தப் பொதுநன்மை என்னும் யக்ஞம் இருக்கட்டும்’ என்று சொல்லித்தான் தொடங்கிவைத்தார். 

பொதுநன்மை என்று அக்கறையுடன் செய்யப்படும் செயல்கள் இனி வருங்காலத்திற்கும் நன்மை திகழ்வதாய் ஆகிவிடுகின்றன. அவற்றை அப்படி ஆக்கித் தருகிறார்கள் தேவர்கள். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இப்படிப் பரஸ்பரம் உறவை ஏற்படுத்தி வைத்தார் படைத்தவர். அதனால்தான் தேவர்களுக்குத் தராமல் தன் செயலைத் தானே உண்பவன் திருடன் என்று கருதப்படுகிறான். யக்ஞமாகச் செய்யும் செயல்களின் பலன்களை அனுபவிப்பவன் அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும் விடுபடுகிறான். ஆனால் தன் சொந்த லாபம் என்று பொது நன்மையை ஒதுக்கி உண்பவன் பாபத்தைத்தான் உண்கிறான். 

உணவையே யோசித்துப் பார்! அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. அன்னமோ மழையிலிருந்து உண்டாகிறது. மழையோ யக்ஞம் என்பதிலிருந்து உண்டாகிறது. யக்ஞம் என்பதே செயல்களைக் கர்மயோகமாக இயற்றுவதிலிருந்து ஏற்படுவதுதான். கர்மயோகம் என்பதோ பிரம்மம் அடிப்படையாக உண்டாவது. பிரம்மம் என்பதோ நமக்கு அருள்மயமான வாக்கிலிருந்து தெரியவருகிறது. அதனால் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரம்மம் என்றும் பற்றின்றிக் கர்மயோகமாக இயற்றப்படும் யக்ஞத்தில் நிலைபெற்றிருப்பது என்று அறிவாயாக. 

இது ஒரு தொடர் சக்கரம் போன்றது. இதைச் சுழற்றுவதில் அனைத்து மனிதரும் தம் தம் பங்கை அளிக்க வேண்டும். அப்படி இந்தப் பொதுச் சுழற்சியில் பங்கேற்காமல் ஒதுங்குபவன் பாபமே வாழ்க்கையாய் வீணே ஜீவிப்பவன் ஆகிறான். 

செயல் வேண்டாம். செயல் வேண்டாம் என்கிறாயே! யாருக்குச் செயல் இல்லை என்பதை நீ அறிவாயா? யார் ஆத்மா ஒன்றிலேயே இலயித்து நிற்கிறானோ, ஆத்மா ஒன்றிலேயே திருப்தியுற்றவனாய் இருக்கிறானோ, ஆத்மா ஒன்றிலேயே நிறைந்த மகிழ்ச்சி கொண்டவனாய் ஆகிவிட்டானோ அவனுக்குத்தான் செயல் என்பது இல்லாமல் போகிறது. அப்படிப் பட்டவனுக்குத்தான் செயலால் ஒரு நன்மையும் இல்லை. செய்யாமையால் ஒரு நஷ்டமும் இல்லை. அனைவர் நடுவிலும் அவனுக்கு எதைக் குறித்தும் யாரையும் சார்ந்தும் இருப்பதில்லை. 

எனவே தேவையில்லாத குழப்பத்தை விடு. பற்றை விட்டுக் கர்மத்தையே யோகமாகச் செய். அவ்வாறு பற்றற்ற செயலாலேயே நீ உயர்ந்த பேற்றை அடைவாய். ஜனகர் போன்றவர்கள் இவ்விதம் கர்மயோகத்தால்தான் பெரும்பேற்றை அடைந்தார்கள். இவ்வளவு ஏன்? உலக நன்மை என்ற ஒன்றை நீ கருதினால் கூடக் கர்மயோகம் அவசியம் என்று புரியும். 

உலகத்தில் உயர்ந்தவர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் உலக மக்களும் அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் எதைச் சான்றாகச் செய்கிறார்களோ அதைத்தான் உலகமும் கைக்கொள்கிறது. எனக்கு இந்த உலகத்தில் எந்தச் செயலும் செய்து எதையும் அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் நானோ எந்நேரமும் செயல் செய்தவண்ணம் இருக்கின்றேன். காரணம் நான் செயல் புரியவில்லையென்றால் உலக மக்களும் செயலை ஒதுக்கி அதனால் துன்புறுவார்கள். உலகத்தில் அறியாமையில் இருப்பவர்கள் பலனுக்காகக் கர்மம் செய்கிறார்கள். ஆனால் அறிவாளியோ பலன்களில் பற்று வைக்காமல் பொதுநன்மை என்னும் கருத்துடன் கர்மத்தை யோகமாகப் புரிகின்றனர். 

இயற்கையில் குணங்களால் ஏவப்பட்டு மக்கள் கர்மங்கள் புரிகின்றனர். அகங்காரத்தால் கட்டுண்டு தாம் தான் செய்வதாக நினைக்கின்றனர். ஆனால் தத்வத்தை அறிந்தவர் குணங்கள் கர்மங்கள் என்ற வித்யாசம் புரிந்தவர் குணங்களால் எல்லாம் நடக்கின்றன, தமக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுடன் இயங்குகின்றனர். 

என்னிடம் எல்லாக் கர்மங்களையும் அர்ப்பணித்து விடு. ஆத்மா பற்றிய நினைவுடன், மமகாரத்தை விட்டு, ஆசைகள் இல்லாதவனாய் இந்த நடுக்கத்தை ஒழித்துப் போர்புரி. 

என்னைக் கருத்தில் கொண்டு நான் சொன்ன இந்த வழியில் யார் செயல் புரிந்தாலும் அவர்களும் கர்மங்களின் தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். தம் இயற்கையால் ஏவப்பட்டு ஞானிகளும் கூடக் கர்மம் புரிகின்றனர் என்றால் நீ  மட்டும் உன் ஸ்வபாவமான இயற்கையிலிருந்து தப்பித்துவிட முடியுமா? என்ன ஒன்றில் கவனமாக  இருக்க வேண்டும். புலன்கள், புலனின்பங்கள், பற்று, வெறுப்பு இவை இருக்கின்றன. இவற்றில் ஒருவர் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக  இருக்க வேண்டும். உன் சொந்தக் கடமை உனக்குப் பழக்கப்பட்டது. அதைவிட்டுப் பிறருடைய கடமையையா செய்யப் புகுவாய்? 

அர்ச்சுனன் யோசிக்கின்றான். ஆம். சரிதான். ஆனால் கடமை, பற்றில்லாமல் செய்வது என்பது சரியே. ஆனால் செயல் புரியும் போது நம்மையும் மீறி, ஏதோ வேகத்தால் இழுக்கப்பட்டுப் பாபம் என்பதைத் துணிந்து செய்கிறோமே? அது ஏன்? என்று கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் பதில் சொல்கிறார்: 

‘அதுவா? காமம் என்று ஒன்று. குரோதம் என்று ஒன்று. இரண்டும் வலிமையான ஈர்ப்பு உடையன. பெரும்பாபம் ஆனவை இவை. ரஜோகுணத்திலிருந்து உண்டாகுபவை. 

தீயைப் புகை மூடுவது போல், கண்ணாடியைத் தூசி மூடுவதுபோல், கருவைச் சுற்றித் தோல் மூடுவதுபோல் அறிவை முற்றிலும் மூடி மறைத்துவிடும் இவை. ஞானத்தையே மறைக்கும் வல்லமை உடைய இந்தக் காமம் இது ஞானிகளுக்குப் பெரும்பகை. காமமோ போட்டதையெல்லாம் உண்டு மேலும் கொழுந்துவிட்டு எரியும் தீ போன்றது. 

இந்திரியங்கள், மனம், புத்தி இவைதான் காமத்தின் இடங்கள். இதில் பற்றிக்கொண்டு எழுந்து மோகம் அடையச் செய்து மனிதர்களை அவர்களின் ஞானத்தை மறைத்துவிடும். 

எனவே முதலில் இந்திரியங்களை அடக்கு. காமமாகியப் பெரும் பகையைக் கொல். இந்திரியங்களை விடப் பெரியது மனம். மனத்தை விடப் பெரியது புத்தி. புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ஆத்மா. எனவே ஆத்ம ஞானத்தில் நிலைநின்றபடி புத்தி மனம் ஆகியவற்றை நல்வழியில் செலுத்தி அடக்க அரிதான பெரும்பகையான காமத்தை ஒழித்துவிடு. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

Tuesday, January 25, 2022

ஸ்ரீ பகவத் கீதை : அறிவுதான் வழி

 பாவம்! கலக்கத்தில் சோர்ந்துபோய்க் கீழே உட்கார்ந்துவிட்ட அர்ச்சுனனைக் கருணையுடன் பார்த்தான் ஸ்ரீகிருஷ்ணன். எத்தனை பெரிய வீரன்! பாசத்தால் அடிபட்டுச் செயல்பட முடியாமல் இருக்கிறான்! 

‘என்ன அர்ச்சுனா! இந்த நேரம் பார்த்து உனக்கு ஏன் இப்படிக் கலக்கமும், நடுக்கமும் வந்ததப்பா? நீ வீரன் அல்லவா? வாழ்க்கையில் ஒரு சூழ்நிலை என்று வந்துவிட்டால் பிறகு நம்மவர் பிறர், பாசம் என்றா பரிதவிக்கமுடியும்? உணர்ச்சிகளையெல்லாம் அகற்றி வைத்துவிட்டு அந்த நேரத்தில் நம் கடமை என்னவோ அதைத்தானே அமைதியாகச் செய்துகொண்டு போக முடியும்? இல்லை நீயே சொல்வதுபோல் ஓடிப் போய்விட்டால் எதிரே நிற்பவர்கள் என்ன உன் பாசத்தையா மெச்சுவார்கள்? இல்லை. நீ ஒரு கோழை. உனக்கு ஏதோ உள்நோக்கம். சொந்தலாபம். அதைக் கருத்தில் கொண்டு ஓடிவிட்டாய் என்றுதானே சொல்வார்கள். வா! எழுந்திரு! வீரனாக நின்று கடமையைச் செய். வெற்றியோ, தோல்வியோ அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.’ 

‘இல்லை கிருஷ்ணா! யாரெல்லாம் நிற்கிறார்கள் பார்! தாத்தா, எனக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள், என்னைத் தோளில் போட்டு வளர்த்தவர்கள், சிறுகுழந்தையிலிருந்து யார் பார்க்க நான் வளர்ந்தேனோ அவர்கள், இவர்களையெல்லாம் சண்டை போட்டு வென்று என்ன செய்யப் போகிறேன்! என் மனம் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டது. ஒரே உள்ளே இருட்டிக்கொண்டு வருகிறது. என் இயல்பு முற்றிலும் அகன்றுவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த நிலையில் நான் புரிந்துகொள்ள வேண்டும்? உன்னையே சரண் அடைகிறேன். நீதான் எனக்கு வழியைக் காட்ட வேண்டும்’ 

‘அர்ச்சுனா! அறிவாளியைப் போலப் பேசுகிறாய். ஆனால் அறிவாளியின் பார்வையில் பார்க்கமாட்டேன் என்கிறாய். கடந்து போவதைக் குறித்துக் கவலையில் ஆழ்வதும், இருப்பதைக் குறித்துப் பெரும் பரபரப்பு அடைவதும் அறிவாளியின் இயல்பு அன்று. எல்லாம் கடந்து போகும். நீ, நான், இந்த வீரர்கள் எல்லாம். இந்த உடம்பு என்ற விதத்தில் பார்த்தால் எதுவும் நிலைப்பதில்லை. ஆனால் ஆத்மா என்ற விதத்தில் பார்த்தால் விஷயமே வேறு. நீயோ, நானோ, இவர்களோ எல்லாம் முற்காலத்திலும் இருந்தோம்; இப்பொழுதும் இருக்கிறோம்; இனி வருங்காலத்திலும் இருக்கவே போகிறோம். தேகத்தில் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமை என்று மாறுவதைப் போல்தான் ஓர் உடலைவிட்டு மற்றோர் உடலுக்கு மாறுவதும். 

குளிர்ச்சி, உஷ்ணம், சுகம், துக்கம் என்ற இரட்டைகளைச் சமமாகக் கருதி நடந்துகொள்பவர் அம்ருதநிலையை அடைகின்றனர். 

இல்லை என்பது என்றும் இருக்கப் போவதில்லை. இருக்கும் ஒன்றோ என்றுமே இல்லாமல் போவதில்லை. மாறும் இவற்றுள் எல்லாம் மறைந்து நிற்கும் அந்த ஒன்று அழியாது. அழிக்கவும் முடியாது. 

அழிவற்றது, நிலையானது, எல்லையற்றதான இந்த ஆத்மா. ஆனால் தேகமோ ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்த ஆத்மா பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை; இல்லாமல் இருந்து பிறகு புதிதாக உண்டானதுமில்லை. என்றும் தான் ஆத்மாவாகவே இருக்கிறது. எனவே எழுந்திரு. போர்புரி. 

உடுத்த துணியைக் களைந்து விடுகிறான் மனிதன். செயலோய்ந்த தேகத்தை உதறிவிட்டு மறுபிறவியை அடைகிறது உயிர். இந்த ஆத்மாவைக் கத்தி வெட்டாது; நீர் நனைக்காது; தீ சுடாது; காற்று உலர்த்தாது. எங்கும் இருப்பது; என்றும் இருப்பது; நகராது; நகர்த்தவும் முடியாது; இந்த ஆத்மா நித்யமானது. 

இந்த ஆத்மா வடிவம் கொள்வதில்லை; இதை மனத்தால் சிந்திக்க முடியாது; மாற்றம் எதுவும் இல்லாதது. இதை உள்ளபடி நீ அறிந்தால் துயரப்பட எதுவும் இல்லை. 

சரி ஒரு பேச்சுக்காக நீ இதைப் பிறப்பதாகவும், இறப்பதாகவும் உள்ள ஒன்று என்று கருதினால் அப்படியும் துயரப்படக் காரணமில்லை. பிறந்து இறந்து மாறும் இயல்புள்ள ஒன்றை நீ மாற்றவா முடியும்? 

இல்லை. தேகத்தோடு சம்பந்தப்பட்ட ஆத்மாவைக் குறித்து நீ நினைப்பாயானால் அப்பொழுதும் எதற்குத் துயரம்? ஆரம்பத்தில் வடிவம் இல்லாமல் இருந்த ஆத்மா பின்னர் தேகம் என்ற வடிவத்தில் வந்து பின்னர் மீண்டும் வடிவமற்ற நிலைக்கே போய்விடுகிறது. அதற்கு நீ என்ன செய்ய முடியும்? 

புரிந்துகொண்டால் சிலருக்கு இந்த ஆத்மா என்றால் ஆச்சரியம்! சிலருக்கோ இதன் வியப்பைச் சொல்லி ஓயாது. இதைப் பற்றிக் கேட்டுச் சிலருக்கு வியப்பு. ஆனால் சிலரோ இதைப் பற்றி எவ்வளவு கேட்டும் புரிந்துகொள்வதில்லை. 

ஆத்மாவின் தன்மை இதுவென்றால் வாழ்க்கையில் உன் நிலையில் என்ன உனக்குக் கடமையோ அதைச் செய்துகொண்டு போ. நீயோ ஓர் அரசன். அறவழியிலான போர் உனக்குக் கடமை. ஏன் கவலைப் படுகிறாய்? இறந்தபின் சுவர்க்கம் என்று நினைத்தாலும் அறவழியிலான போர்தானே ஓர் அரசனுக்குத் திறந்து வைத்திருக்கும் சொர்க்கவாசல்? அதை விட்டுவிட்டுக் கடமையில் தவறினால் உலகம் உன்னை இகழும். எதிரிகளுக்கோ நீ ஏளனப் பொருளாக ஆகிவிடுவாய். அதைவிட என்ன இழுக்கு சொல்? இறந்தால் சொர்க்கம். இருந்தால் வெற்றிவாகை. எனவே எழுந்திரு. போர்புரி. துன்பம், இன்பம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி; அனைத்தையும் சமம் ஆக்கு. போர்புரி. உனக்குப் பாபம் எதுவும் வராது. 

ஆத்மாவைக் குறித்த ஞானத்தை உனக்குச் சொன்னேன். யோகத்தைக் குறித்த அறிவையும் உனக்குச் சொல்கிறேன். அதைக் கைக்கொண்டால் கர்மபந்தங்களை அகற்றி விடுதலை அடைவாய். கர்மயோகம் என்னும் இதில் வீணானது எதுவும் இல்லை. சிறிதே இதை நீ கடைப்பிடித்தாலும் கூடப் பெரும் பயத்திலிருந்து உன்னைக் காப்பாற்றும். முனைப்போடு இருந்தால் புத்தி ஒன்றுதான். முனைப்பில்லாதவனுக்கோ பலப்பல புத்தி. 

கர்மயோகம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆசைக்காகக் கர்மம் என்று வேதங்களில் சொல்லியிருக்கும் அலங்காரமான வார்த்தைகளைக் கண்டு ஈடுபடுபவனுக்கு ஆசை கொண்ட வழியெல்லாம் கர்மம் என்று ஆகிச் சொர்க்கம், இன்பம் என்று பிறவிக்கு மேல் பிறவி. வேதங்களில் மூன்று குணங்களுக்கும் உரிய விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கும். நீ குணங்களைக் கடந்த நிலைக்குப் போ. இரட்டைகளைக் கைவிட்டு, என்றும் சமமாக இரு. புதிது புதிதாக அடைவது, அடைந்ததைக் காப்பாற்றிக் கொள்வது என்னும் கவலையைக் கடந்து போ. ஆத்மாவை அறிந்தவனுக்கு வெள்ளத்தின் நடுவே கிணற்று ஜலம் போல்தான் வேதம். 

கர்மயோகம் என்பதில் கர்மாவை எப்படி எந்த மனநிலையில் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். கர்ம பலனால் ஒரு பயனும் இல்லை. பலன்களில் ஆசை வைத்துக் கர்மங்களில் ஈடுபடாதே. ஆனால் அதற்காக எந்தச் செயலும் செய்யாத சோம்பேறியாகவும் ஆகிவிடாதே. யோகத்தில் நிலைநின்று கர்மங்களைச் செய். பற்றை விடு. கிடைக்கிறது கிட்டவில்லை என்பதில் சமமாக இரு. சமத்வ மனநிலைதான் யோகம் என்று சொல்லப்படுவது. சமத்வபுத்தியுடன் செய்யப்படும் கர்மத்தை விட மிகவும் தாழ்ந்தது பலன் குறித்த ஆசையால் செய்யப்படும் கர்மம். சமத்வபுத்தியில் தோய்ந்து இரு. பலன் குறித்து அலைபவன் வெறும் கிருபணன். 

எனவே சமத்வபுத்தி என்னும் யோகவழியில் நிலைநின்று செயல் நன்மையாகுமா தீமையாகுமா என்னும் கவலையை விட்டுக் கர்மயோகம் என்னும் பாவனையோடு போர்புரி. கர்மங்களில் பற்றின்றி இங்ஙனம் சமத்வபுத்தியுடன் இயற்றும் திறமைதான் கர்மங்களில் குசலனாய் இருத்தல் என்னும் தன்மை ஆகும். 

இவ்வாறு சமத்துவபுத்தியோடு செயல் புரிதல் என்னும் கர்மயோகத்தில் நிலைநின்று நன்மதியாளராய் இருப்பவர்கள் கர்மங்களின் பலன்களில் பற்றை விடுத்துப் பிறவித்தொடராகிய பந்தத்தினின்றும் முழுதும் விடுபட்டு அழியாத நிலைக்குச் செல்கின்றார்கள். 

உன்னுடைய புத்தியானது மோகமாகிய அழுக்கு நீங்கப் பெற்றால் அப்பொழுது காதில் விழுந்தது, இனி விழப்போவது எதைக் குறித்தும் பதட்டப்படாத மனநிலையாகிய நிர்வேதம் என்பது உனக்கு உண்டாகும். 

காதில் விழும் பலவித அபிப்ராயங்களால் எத்துண்டு அலையும் உன்னுடைய புத்தியானது எப்பொழுது சமத்வம் என்பதில் நிலைபெற்று அசையாமல் இருக்குமோ அப்பொழுதே நீ கர்மயோகம் என்பதில் நிலைத்தவனாக ஆவாய். 

(இப்பொழுது அர்ச்சுனனுக்கு மனம் சற்றே அமைதியடைந்து தனக்கு ஏற்பட்ட மனப்பிரச்சனை என்ன என்று புரியத் தொடங்கியது. தன்னுடைய புத்தி சமத்துவபுத்தியாக நிலைபெறாமல் மோகமாகிய குற்றத்தால் அலைபாயும் ஒன்றாக இருந்திருக்கிறது என்று புரிந்தது. எனவே ஆர்வமாகக் கேட்கிறான்) 

‘கிருஷ்ணா! தன் பிரக்ஞையில் நிலைபெற்றவர், சமத்துவபுத்தியில் ஊன்றி நிற்பவர் என்பவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்துகொள்வார்? அவரைப் பற்றிய விவரணை என்ன? அசையாத மதிவாய்ந்தவரின் செயல் எப்படி இருக்கும்?’ 

‘அர்ச்சுனா! மனத்தில் உண்டாகும் காமங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் விட்டு ஆத்மா ஒன்றில் மட்டும் தன்னளவில் திருப்தியடைந்து இருப்பவன் அந்த நிலையில் பிரக்ஞையில் நிலைத்தவன் - ஸ்தித ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான். 

துக்கத்தில் மனக்கஷ்டமும், சுகத்தில் நாட்டமும் இல்லாதவனாய், பற்று, பயம், சினம் ஆகியவற்றை அகற்றித் தெளிந்த மதியில் நிலைத்தவனே மனனசீலன் என்னும் சிந்தனையாளனாகச் சொல்லப்படுகிறான். 

யாருடைய பிரக்ஞை நிலைபெறுகிறது? சுபமோ அசுபமோ எது வந்தாலும் அதில் ஈடுபாடு இல்லாதவனாய், எதிலும் மகிழ்வதும் இல்லை, எதிலும் வெறுப்பு அடைவதும் இல்லை என்று இருக்கிறானோ அவனுடைய பிரக்ஞைதான் நிலைத்த தன்மை அடைகிறது. 

யார் புலன் விஷயங்களினின்று புலன்களை, ஆமை தன் அங்கங்களைத் தன் ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளுமோ அதைப் போல், புலன்களை விஷயங்களினின்றும் மீட்டுக் கொள்கிறானோ அவனுடைய பிரக்ஞையே நிலைபெறுகிறது. 

தன்னடக்கம் பயிலும் ஒருவரிடமிருந்து புலன் விஷயங்கள் விலகி விடுகின்றன. ஆனாலும் புலன் விஷயங்களின் சுவைமட்டும் எஞ்சி இருக்கிறது. அதுவும் பரம்பொருளைத் தெளிவாக உணரத் தொடங்கும் போது விட்டு விலகிவிடுகிறது. 

உயர்ந்த பேற்றிற்கு முயலும் தெளிந்த மதியுடைய அறிஞனைக் கூட வேகம் மிக்க புலன்கள் வலுக்கட்டாயமாக மனத்தைப் பிடித்து இழுக்கின்றன. 

(இப்படித் தெளிந்த மதியாளனைக் கூட புலன்கள் வலுக்கட்டாயமாக இழுக்கும் என்றால் எப்படித் தப்புவது? என்ன வழி? இங்குதான் கருணையோடு கண்ணன் ஒரு வழியைக் காட்டுகிறான்) 

அர்ச்சுனா! என் விஷயமான ஈடுபாட்டை ஒருவர் வளர்த்துக்கொண்டு விட்டால் அவரிடம் இந்தப் புலன்கள் தங்கள் வேகத்தைக் காட்ட முடியாமல் வலுவிழந்து, அதனால் அவர் யோகத்தில் நிலைபெற்றுத் தன் புலன்களையெல்லாம் தன்வசம் அடக்கியவராய் ஆகிவிடுகிறார். புலன்கள் வசமானவருடைய பிரக்ஞை நிலைபெற்று விடுகிறது. 

என்னிடம் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளாமல் வெறுமனே புலன்களை மட்டும் அடக்கி வசமாக்க முடியாதா என்றால், அப்படி அடக்கி வசமாக்க வேண்டிப் புலன்களை நினைக்கும் போதும் அவற்றின்பால் பற்றுதல் தோன்றி விடுகிறது. புலன்களில் பற்றினால் அவற்றில் காமம் உண்டாகிறது. காமம் தோன்றவே கூடவே குரோதமும் உண்டாகிவிடுகிறது. 

குரோதத்திலிருந்து கவிந்த மோகம் ஏற்படுகிறது. மோகம் கனக்கவே நினைவு மறந்துவிடுகிறது. நினைவு மறதியினால் புத்தி நாசம் அடைகிறது. புத்தி நசித்துவிட்டால் ஒருவர் நசித்துவிடுகிறார். 

பற்று, வெறுப்பு என்பதை விட்டுத் தன்னிடத்தில் வசமாக அடக்கிக்கொண்ட புலன்களுடன் உலக விஷயங்களிடையே நடமாடுபவன், அந்தத் தன்னடக்கம் மிக்கவன் நிலைத்த அமைதியை அடைகிறான். 

நிலைத்த அமைதி திகழும்போது அத்தனை துக்கங்களும் நீங்கிவிடுகின்றன. அமைதி நிலைத்த மனம் கொண்டவனின் புத்தி மிக விரைவில் நிலைபட்டு விடுகிறது. 

இவ்வாறு யோகத்தில் நிலைபெறாதவனுக்குப் புத்தி நிலைநிற்பதில்லை. யோகத்தில் நிலைபெறாதவனுக்கு ஆத்ம உணர்வில் தோய்வதாகிய பாவனை என்பதும் இல்லை. ஆத்ம உணர்வில் தோய்வு என்னும் பாவனையற்றவனுக்குச் சாந்தி என்பது ஏது? சாந்தியற்றவனுக்கு ஏது சுகம்? 

அலையும் புலன்களின் வழியே மனமும் கூடச் செல்லும்படி இருப்பவனுக்கு அலைகடலில் எப்படிக் காற்று நாவாயைத் தன்வழியே இழுத்துச் சென்று விடுமோ அதைப் போல் அவனுடைய பிரக்ஞையை இழுத்துச் சென்று விடுகிறது. 

எனவே தோள்வலி மிக்கவனே! புலன் விஷயங்களில் பாயாமல் யாருடைய புலன்கள் கட்டுப்பட்டு இருக்கிறதோ அவனுடைய பிரக்ஞைதான் நிலைபெற்றது ஆகும். 

பொதுவாக அனைத்து உயிர்களுக்கும் விழித்த நிலையாக இருக்கும் உலக விஷயங்களைப் பொறுத்தவரையில் மனம் அடங்கியவனுக்கு உறங்கும் இரவு போன்றுதான் இருக்கும். மற்றவர்களுக்கு இரவு போன்று இருட்டாக இருக்கும் ஆத்மா பற்றிய விஷயத்திலோ மனனசீலம் மிக்கவனுக்கு விழிப்பு நிலை போன்று ஈடுபாடு மிகுந்து இருக்கும்.

பெருங்கடல். அதனுள் பலவழிகளிலும் நீர்கள் கலந்தாலும் கடல் கலங்காமல் நிலைபெற்று இருப்பது போன்று உலக விஷயங்களின் நடுவே புலனடக்கம் பேணும் நிலைபெற்றவனுக்கு எத்தனைதான் விஷயங்கள் சுற்றியிருப்பினும் அவற்றில் ஈடுபாடு தோன்றாமல் சாந்தியே நிறைந்திருக்கும். பற்றுகொள்பவனுக்கு இல்லை. 

பற்றில்லாமல் ஆசைகளைத் துறந்து, நான் எனது என்ற அபிமானம் இல்லாதிருப்பவன் எவனோ அவனே சாந்தியடைகிறான். 

பார்த்தா! இதுதான் பிரம்மத்தில் நிலைபெறுதல் என்று சொல்லப்படுவது. இந்நிலையை அடைந்தபின் ஒருவன் ஒருபோதும் மயங்குவதில்லை. இந்த நிலையில் நிலைபெற்றுக் கடைசி காலத்திலும் கூட மாற்றம் இன்றி, பிரம்மத்திலிருந்து பிரியும் தடைகள் எல்லாம் நீங்கப் பெற்றவனாய் பிரம்மத்தையே அடைகிறான். 

(அறிவுதான் வழி. வாழ்க்கையில் எப்படிக் கடமையைச் சரிவரச் செய்வது என்பதற்கு மட்டுமன்று. வாழ்க்கையில் முழுமையை அடைவதற்கும் அறிவுதான் வழி. எப்படிப்பட்ட அறிவு? சமத்வம் நிலைபெற்ற அறிவு. ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***